பரோட்டா சாப்பிடுவது என்பது, வெறும் பசிக்கு எதையோ சாப்பிடுவது போல அல்ல, அது ஒரு பகட்டான அனுபவம், இட்ஸ் ஏன் எமோஷன். பொதுவாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்குடி, பரமக்குடி, நாகப்பட்டினம், நாகூர் பகுத்துகளில் பரோட்டா ருசி அள்ளும். பாண்டிய நாட்டில் மண்ணின் மனமும், காரைக்குடி, பரமக்குடி பகுதியில் செட்டிநாட்டின் குணமும், தூத்துக்குடி, கீழக்கரை, நாகை பகுதிகளில் இஸ்லாமிய உணவு முறையின் fusion'னும், இப்படி ஒவ்வொரு இடத்திலும் பரோட்டா-சால்னா தன்னிகரற்ற ருசியுடன் கிடைக்கும்.
இதற்க்கு நேர்மார், சென்னையில் கிடைக்கும் பரோட்டா உணவு. கொங்கு பகுதியிலும் இப்படியே. சிறந்த பல சமைக்கும் முறைகள், தனித்துவமான பல உணவுகள் இருந்தாலும், கொங்கு பகுதியில் பரவலாக பரோட்டா-சால்னா உணவு மற்ற மேலே சொன்ன பகுதிகள் போல கிடைக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, கொங்கு பகுதியில் பரோட்டாவுக்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் முறையும் இருக்கும். சரத்குமாருக்கு, சிம்ரன் ஜோடியாக நடித்ததைப்போல , ரெண்டும் ஒட்டாது.
வெறும் பரோட்டாவுக்கென்று ஒரு சுவை உண்டு, அடுக்கு அடுக்காக, மேல் பக்கம் முறுகலாக, உன்பக்கம் மெதுவாக என்று, ஒரு வடிவமும் உண்டு. கொங்கு பகுதியில் பெரும்பாலும் உபயோகித்து பழையது ஆகிய தலையணை போல மொத்து மொத்து என்று இருக்கும்.
இந்த அனுபவத்தை மாற்றியது, ஈரோடு கொங்கு பரோட்டா ஸ்டால். ஈரோடு நண்பர் ஒருவர் சொல்லியதால் இங்கு ஒரு 10 வருடம் முன்பு சென்றேன், இப்போது ஈரோடு போனால் இரண்டு முறை கொங்கு பரோட்டா ஸ்டால் லட்சியம், ஒரு முறை நிச்சயம். அதிக அலங்காரங்கள் இல்லாமல், ஊர் பகுதிகளில் இருக்கும் சாதாரண உணவக அமைப்பு. வெளியே ஒரு பெரிய மைதானம் அளவுக்கு தோசை கல், பல முழுநிலவுகள் தரை இறங்கியதை போல, தோசை கல் முழுவதும் பரோட்டாக்களை போட்டு எடுத்துக்கொண்டே இருப்பார்கள். விற்றுக்கொண்டு இருக்கும்.
இங்கு கிடைக்கும் அசைவ சால்னா aka குருமாதான் அட்டகாசம். சாதாரணமாக குழம்பு போல கொண்டு வந்து கொடுக்காமல்,அசைவ குழம்பை ஒரு பெரிய இரும்பு சட்டியில் போட்டு, மிதமான சூட்டில் சுண்ட செய்து, அதன் சுவையை இரு மடங்கு கூட்டி, சுட சுட நம்முடைய இலைக்கு பரிமாறப்படும்.
எப்போதுசென்றாலும்,2 பரோட்டாவும் , இங்கு கிடைக்கும் மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து, இலையில் சுட சுட கிடைத்தபின், பஞ்சு போன்ற மென்மையான பரோட்டாவை, அதற்கு வலி இன்று பிய்த்துப்போட்டு, சுவை கூட்டப்பட்ட சால்னாவை மலைச்சாரல் போல ஊற்றி, ஊறச்செய்து, ஒரு பெரிய பகுதியையே எடுத்து, மட்டன் சசுக்காவின் ஒரு சில துண்டங்களை எடுத்து, விரலைகளில் அதன் அமைப்பை அனுபவித்து, வாயில் போட்டு மென்று கண்ணை மூடினால், ஏனுங்க... இதானுங்க Divine !!! கணக்கில்லாத பரோட்டா, unlimited divine ....
பெரும்பாலும் ஈரோட்டுக்கு சென்று, அங்கிருந்து பெருந்துறைக்கு சென்று வேலை விஷயமாக திரும்புவோம். போகும்போதும் கொங்கு பரோட்டா ஸ்டாலில், திரும்ப வரும்போதும் நேரம் இருந்தால், மீண்டும் கொங்கு பரோட்டா ஸ்டால்'லே??
இப்போது ஈரோடு பக்கம் போவது முழுவதுமாக குறைத்துவிட்டது, ஆனாலும் கொங்கு பரோட்டா ஸ்டாலின் அனுபவங்கள் மனம் மாறாமல் அப்படியே. பர்ஸை பதம் பார்க்காமல், அபாரமான ஒரு உணவிற்கு இங்கு செல்லலாம்.
இந்த பெயரையே நிறைய மாற்றம் செய்து, நிறைய போலியான கடைகள் அந்த பகுதியில் ஏராளம். ஒரிஜினல் கொங்கு பரோட்டா ஸ்டாலில், ஈரோடு KMCH க்கு அருகில் உள்ளது.
நன்றி